விஷ்ணுபுரம் விருது 2016 முதல் நாள்

 

 

IMG_8238 (1)

 

 

முதல் அமர்வு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் முன்னமர்ந்து நடத்தினார். மரபில் இருந்து வளமையான சொற்கள் அற்று போய்விடாமல், அடுத்த தலைமுறை வாசகனுக்கு எடுத்து அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் உற்சாகத்துடன் நிகழ்ந்தது.  கவிதை ஞானத்திற்கு மிக அருகில் இருக்கிறது எனவும், மொழியில் பலவேறு புதிய சொற்கள் வந்து  குவிய வேண்டியது அவசியம் எனவும் கூறினார். உதாரணமாக கம்பராமாயணத்தில், யானை என்ற பொருள்படும்  களிறு, குஞ்சரம், வாரணம் போன்ற பல சொற்கள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்த வெவ்வேறு சொற்கள் அவற்றின் ஓசைநயத்திற்கு ஏற்ற வகையில் செய்யுளில் அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என சுட்டி காட்டினார் நாஞ்சில். ஆய்வாளன், விமர்சகன், அகராதி, கலைசொல் உருக்குபவன் இவர்களை விட எழுத்தாளனுக்குதான் இந்த பணியின் பெரிய பொறுப்பு என விவாதிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, கன்னியகுமாரி மாவட்டத்திலேயே மூன்று தனி தனி வட்டார வழக்கு இருப்பதையும், அந்தந்த வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களின் அவசியத்தை பற்றி விவாதம் நிகழ்ந்த்து. இந்த வட்டார சொற்கள் வாசகன் வாசிப்பிற்கு தடையாக இருப்பதால், இலக்கியத்தில் இவற்றை சமன்படுத்தி ஒற்றை வழக்காக்கும் போக்கு அவசியம்தானே என்ற கேள்விக்கு நல்ல வாசகன் இந்த தடைகளை பொருட்படுத்தாமல், வெல்விளியாக எடுத்து இலக்கியத்தின் சாரத்தை தேடி வாசிப்பான் என்றார்.

நாஞ்சில் அவரது மராட்டிய நண்பருடன் பழகியபோது நடந்த நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அந்த நண்பர் வீட்டில் இருவருக்கும் சேர்த்து உணவாக ரொட்டி தயார் செய்யப்பட்டது. ரொட்டி பரிமாறியபோது, இருவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். அப்போது, விருந்தினரான நாஞ்சில் காத்திருக்கும் நிலை வந்தது. அதை கண்ட, அவர் நண்பரின் மனைவி அந்த ரொட்டி இரண்டாக பிரித்து, பாதி பாதி ரொட்டியை சுட்டு இருவருக்கும் பகிர்ந்தளித்தார் எனவும், அதனால் உற்சாகமாக பேசியபடி உணவருந்தினார்கள் எனவும் நெகிழ்வுடன் மராட்டியர்களின் விருந்தோம்பலை நினைவு கூர்ந்தார். இரயிலில் முதுகை திருப்பி வாசனையை கூட பிடித்து வைத்து உணவு உண்ணும் தமிழர்களின் விருந்தோம்பல் வெடிச்சிரிப்புடன் பகடி செய்யப்பட்டது. 

கம்பராமாயண வாசிப்பில் நுழையும் வாசகன் சந்திக்கும் சிக்கல்கள் தொடர்பான விவாதம் நடந்தது முதன்மையான தளை ராமனை கடவுளாக, கம்பராமாயணைத்தை புனிதநூலாக வாசிப்பதுதான். அந்த நூலையும் ஒரு இலக்கிய படைப்பாக எண்ணி, ராமனை கதைக்குள் இருக்கும் பாத்திரம் என நினைத்து, அதற்கான கவனத்தையும், உழைப்பினையும் செலுத்தினால் கண்டிப்பாக வாசிப்பின்பம் கிடைக்கும் என்றார். செய்யுளை சீர்பிரிக்க உதவும் பல உரைநூல்கள் கணிசமாக கிடைக்கின்றன எனவும், கோவை கம்பன் கழகம் வெளியிட்டுள்ள உரைநூல் நல்ல துணை எனவும் கூறினார்.

புதிய சொற்கள் தொடர்பான விவாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகன், அவர் கண்டுபிடித்து அவர் எழுத்தில் பல முறை பயன்படுத்திய ‘பரப்புரை’ என்ற சொல்லை தினதந்தியில் படிக்க நேர்ந்த்து, ஆச்சரியமான அனுபவம் என்றார்.  புதிய சொற்களை கண்டறிவதோடு இல்லாமல், ஏற்கனவே புழங்கும் தமிழ் சொற்களை இணைத்து பிறமொழி சொற்களுக்கு பதிலாக பயன்படுத்தலாம் எனவும் கூறினார். உதாரணமாக ஜாதகம் என்ற சொல்லிற்கு பிறவிநூல் என்ற சொல் பொருத்தமாக இருக்கிறது என்றார். எனக்கு அவர் எழுத்திலிருந்து படித்த சவால் என்னும் சொல்லுக்கு பதிலாக வெல்விளி என்ற சொல்லும், அதிர்ஷ்டம் என்ற சொல்லிற்கு நல்லூழ் என்ற சொல்லும் நினைவிற்கு வந்தது. Risk என்ற ஆங்கில சொல்லிற்கான சரியான பொருளை தரும் தமிழ் சொல்லை இன்று வரை தேடிகொண்டிப்பதாக நாஞ்சில் கூறினார். நேரிடர், அபாயம் போன்ற சொற்கள் நெருக்கமான பொருளை தந்தாலும் பொருத்தமான சொற்கள் இல்லை என்றார்.

 

IMG_8244

 

மேடை நாடக நடிகர், திரைபட நடிகர், எழுத்தாளர் பாரதி மணி, எழுத்தாளர் க.நா.சு வின் மருமகன் என கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடனான கலந்துரையாடல் உற்சாகமாக நிகழ்ந்தது. நவீன தமிழ் நாடகங்கள் மீதிருக்கும் அவரின் விமர்சனத்தை கறாராக முனவைத்தார். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை நாடகம் எழுத கேட்டுகொண்டு பின் அவர் எழுதிய நாடகங்களை மேடையேற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அந்த நாடகத்தில் இருந்த பெண் பாத்திரத்தின் வசனத்தை, அப்போது அவருடன் வழக்கமாக நடித்த மேடை நடிகைகள் பேச மறுத்த நிகழ்வினையும், அந்த பாத்திரத்திற்கு துணிந்து நடிக்க வந்து பின்னால் அவரின் துணைவியானவர் க.நா.சு.வின் மகனாள ஜமுனா என கூறினார். அவரின் அம்மா செய்த மசால் வடையின் எண்ணிக்கை குறித்து எண்ணாமல் அவர் சாப்பிட்ட அனுபவத்தையும், நடிகர் ஜெமின் கணேசன் உடன் மது அருந்திய நிகழ்ச்சியையும், நிகழ்ச்சியின் இடைவெளியில் தோரணையாக அமர்ந்து பைப் புகை பிடித்தனையையும் எண்ணிய போது  ரசனையான மனிதர் என தோன்றியது. அவர் தனது பேச்சில் இலக்கிய கூட்டத்திற்கு எதிர்பார்த்து வந்த நண்பர்களுக்கு பிறழ்வு நிகழ்வாக (Aberration) இருக்க கூடாது என கூறினார். ஆனால் எந்த வித்ததிலும் பாதை மாறாமல் செறிவான கலகலப்பான கலந்துரையாடலாகவே அவர் பேச்சு அமைந்தது.

DSCN2356

எழுத்தாளர் இரா முருகன் தன்னுடைய பூர்வீகமான சிவகங்கை சூழல் பற்றியும், இளம் வயதில்,  வாசிப்பிலும் அதனை தொடர்ந்து எழுத்திலும்  நுழைந்த அனுபவம் குறித்தும் விவரித்து தொடங்கினார்.  அவரின் பணியின் போது தங்க நேர்ந்த இடங்களையும், அந்த சூழலில் இருந்து தான் பெற்ற படைப்பூக்கத்தையும் எழுத்து அனுபவத்தையும் குறித்து சுருக்கமாகவும், செறிவாகவும் பேசினார். எழுத தொடங்கிய முதல் சில வருடங்களில் கவிதை எழுதியதையும், கதை , நாவலுக்கு முன்னரே நுழைய அது தாமதிக்க வைத்ததாகவும் கூறினார். முதல் வாசகர் கேள்வியாக, சுஜாதா அவர்களின் வழி வந்தவர் என கருதப்படுவது பற்றி என்ன நினைக்கிறார் என கேட்கப்பட்டது. அந்த கருத்து ஒரே நேரத்தில் இசையாகவும், வசையாகவும் தோன்றுவதாக கூறினார். அவரின் நாவல்களில் மாய யதார்த்தவம் பற்றிய கேள்விக்கு, அது பிரக்ஞைபூர்வமாக நிகழவில்லையென்றும், எழுத்து அது இட்டு செல்லும் இடமாக இருக்கிறது என்றும் கூறினார்.

DSCN2361

முதல் நாளின் உச்சமான நிகழ்ச்சி சந்தேகமின்றி எழுத்தாளர் பவா செல்லதுரையின் பேச்சுதான். அற்புதமான உடல்மொழியுடன்,  எந்த தடையும் இல்லாமல், நேரடியாக மனதிலிருந்து கதைகள் சொன்னார். திருவண்ணாமலை ஊரில், அவரின் தெருவில், அவரின் அருகிலேயே நிறைந்து கிடக்கும் தனித்துவமான குணம், செய்கைகள் உள்ள சாதாரணமான மனிதர்களே அவரின் படைப்புக்கான ஊற்றுகண் என்றார். இவர்களின் கதைகளே அள்ள அள்ள குறையாமல் அவரை சுற்றி கொட்டி கிடக்கின்றன. அதனை எழுத்தில் கொண்டு வருவதே அவரின் இலக்கு என்றார். மலையாளத்திலிருந்து அவர் மொழியாக்கம் செய்திருக்கும், இன்னும் தமிழில் அச்சில் வராத  எழுத்தாளர் பால் சகாரியாவனின் சிறுகதையை உணர்வுபூர்வமாக, ஆங்காங்கு வட தமிழக வட்டார சொற்கள் கலந்து சொன்னார்.

ஓர்  அழகான ஆண் கரடியே அந்த கதையின் முதன்மைபாத்திரம். அதன் அழகினால் கவரப்பட்ட பல பெண் கரடிகளை விலக்கி, மனித பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கிறது. காட்டிலிருந்து சேகரித்த மிகுந்த ருசிமிக்க தேனை அடையுடன் கொட்டி மனித பெண்ணிற்காக காத்திருக்கிறது அந்த கரடி. தேனினால் கவரப்பட்டு, அங்கு வந்து அந்த தேனை ரசித்து சாப்பிடும், அழகியான மனித பெண்ணிடம் திருமணத்திற்கான தனது விருப்பத்தை தெரிவிக்கிறது அந்த கரடி. சிறிது யோசனைக்கு பின் அந்த பெண், காட்டிலிருக்கும் கரடி, கேரளத்து ஆண்கள் போல காலையில் எழுந்து மாத்ருபூமி படித்து,  அரசியல் பேசி பூசலிடாது. கரடி குளிக்காவிட்டாலும் அதன் வாயிலிருந்து சிகரெட் புகையிலை வாசனை, மது வாசனை அறவே இருக்காது. என்ன உடலில் கொஞ்சம் முடி அதிகம். கேரளத்து மனிதனுக்கு இந்த கரடியே பரவாயில்லை என கரடியை திருமணம் செய்கிறாள். கரடியிடம் திருமணம் செய்து,  குழந்தைபெற்று அம்மா வீட்டிற்கு திரும்ப வந்த போது.  கரடி அந்த விசயத்தில் எப்படி? என அம்மா கேட்கிறார். குழந்தை கரடியை பார்த்தாயல்லவா, எந்த குறையுமில்லை என்கிறாள் மகள். காலம் கடந்திருந்தாலும் பரவாயில்லை, இந்த மனிசனுக்கு பதில், ஒரு நல்ல கரடியை பார், மறுமணம் செய்து விடலாம் அவளின் அன்னை கேட்பதாக அந்த கதை முடிகிறது.

பின் அவர் எழுதிய கதையான எச்சம் கதையை மேடையில் சொற்களால் நிகழ்த்தி காட்டினார். கிணறு தோண்டும் ஒட்டர்கள் சமூகம் பற்றிய கதை. கதை சொல்லியின் வீட்டிற்கு,  கிணறு வெட்டுவேன் என கூறி அறிமுகமாகும் ஒட்டர் ஒருவர். வறண்ட நிலத்தின் நடுவே, ஒரு இடத்தை குறியிட்டு அதன் அடியில் காவிரி பாய்கிறது என ஏமாற்றி அங்கு  அவர் மனைவி, மகளுடன், கூடாரமிட்டு தங்குகிறான். கிணறு வெட்ட ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்தபின்னரும், பலி கொடுக்க ஆடு வாங்க மேலும் பணத்தை கேட்டு பெற்றுகொள்கிறான். ஒருநாள் இரவு  ஆட்டின் எல்லா உள்பாகங்களும் கலந்த ருசிமிகு படையலான பங்குகறியை கதைசொல்லிக்கு தருகிறான். அடுத்த நாள் 25 அடி ஆழத்திற்கு கதைசொல்லியை அழைத்து, பாறையால் அழுத்தி மறைக்கப்பட்ட முதல் ஊற்று நீரை,  அவன் பின் தலையினை பிடித்து அழுத்தி, அவனுக்கு மூச்சு முட்டி திகட்ட திகட்ட பாய்ச்சி அடிக்க செய்கிறான், இதனை கண்ட அந்த கதை சொல்லி மனைவி ஆனந்ததில் மனகிளர்ச்சியடைந்து செய்து, இரண்டு தங்க வளையல்களை தூக்கி கிணற்றுக்குள் வீச ஒட்டர் பெற்று கொள்கிறான். மீதமுள்ள பணியை முடிக்காமல் , அந்த இரவே அங்கிருந்து பணத்துடன் தப்ப தயாரகுகையில், வளையலுடன் அவனது மகள் காணமல் போகிறாள். தேடிப்பார்க்கையில் கிணறுக்குள்ளே ஒரு இருண்ட சிறிய மண் குகைக்குள்,  வளையள்களுடன் குளிரில் வெடவெடக்க உட்கார்ந்திருக்கிறாள் அவரின் மகள். என் திருமணத்திற்கு வளையல் கொடுத்த அந்த அம்மாவிற்காக இந்த கிணறை வெட்டி முடிக்காமல் வரப்போவதில்லை என அவள் கூறுவதாக கதை முடிகிறது. அதுவே அவளின் அறம் , எளியவர்களின் அறம் என சொல்லி பவா அந்த கதையை முடித்தார்.

சீரான இடைவெளிகளில் அங்கத்ததுடன், ஈர்க்கும் குரலில், கேட்பவர்கள் உள்ளத்தில் அழுத்தமாக சிம்மாசனமிட்டு அமருமாறு  இந்த  Captivating கதையை கூறினார். என் கண்கள், காதுகள் முழுக்க அந்த ஊற்று தண்ணீர் போல அவரின் சொற்கள் நிறைக்க, மூச்சு முட்ட, மனம் திகட்ட நான் அமர்ந்து அவரின் பேச்சை கேட்டு கொண்டிருந்தேன்.

 

 

IMG_8353

விழாவின் அடுத்த பகுதி,   செல்வேந்திரன் மற்றும் செந்தில் அவர்களால் புதுமையாக நடத்தப்பட்டது.  அந்த நிகழ்ச்சி இலக்கிய வினாடி வினா, ஆம் , பதில் தெரிந்தவர்கள் கேள்வி கேட்டு, பதில் தெரியாதவர்கள் இதுவா அதுவா என குழம்பி விழிக்கும் நிகழ்ச்சிதான். மேடையிலிருந்த மேசை பரிசாக அளிக்கப்பட போகும் புத்தகங்களால் நிரப்பபட்டது. என்னை போன்ற இளம் வாசகர்கள் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு தரையில் அமர்ந்து பங்கேற்றோம். மீதமிருந்தவர்கள் பார்வையாளர்கள் அணியாக பிரிக்கப்பட்டார்கள். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் தொடர்பான ஆழமான, ஆர்வமூட்டும் வினாக்கள் கேட்கப்பட்டது. உதாரணமாக Herman Melville எழுதிய Moby dick நாவலில் முதன்மை கதாபாத்திரத்தின் கப்பலில் First mate ன் பெயர் என்ன? விடை அறிய குறிப்பாக அந்த பெயரில் அமெரிக்காவில் உணவு நிறுவம் ஒன்று செயல்படுகிறது என சொல்லப்பட்டது. அதற்கு விடை Star Buck என்பது விடை. ஆ.மாதவன் அவர்கள் எழுதிய, திருவனந்தபுரத்தில் மணல் அள்ளும் சமூகம் பற்றிய நாவல் என்ன? என்ற கேளவிக்கு விடையாக ‘புனலும் மணலும்’ என சொல்லி, ‘ஏழாம் உலகம்’ நாவலை பரிசாக பெற்றேன். லயோலா கல்லூரி மாணவரான பாரதி அதிக கேள்விக்கு பதிலளித்து புத்தகங்களை பெற்றார். பங்கேற்ற அனைவரும் , கேள்விக்கான விடைகளை விவாதித்தபடி உற்சாகமாக எழுந்தோம். இது போல அனைவரையும் பங்கேற்ற செய்யும் நிகழ்ச்சியை விஷ்ணுபுரம் வாசக வட்டம் தவறாமல் நடத்த வேண்டும் என  கேட்டுகொள்கிறேன்.  இடையிடையே உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை, புத்தகங்களை வாங்குதல். இரவில் குஜராத் சமாஜில் கல்லூரி விடுதியை  நினைவுபடுத்தும் நெருக்கமான இரண்டடுக்கு படுக்கைகள் நிறைந்த, பெரிய அறையில் நண்பர்களான கமலகண்ணன், விஜயகுமார் உடன் அரட்டை விவாதம் என நேரம் சென்று,  அந்த நகராத அப்பர் பெர்த்தில் உறக்கத்துடன் முதல் நாள் நிறைவுடன் நிறைவடைந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்