விஷ்ணுபுரம் விருது 2016 இரண்டாம் நாள்–சு வேணுகோபால் உரை

இரண்டாவது நாள் காலை 6 மணிக்கு எழுந்தேன். எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடனான காலை நடையை தவற விட்டு விட்டோம் என என்னை நானே கடிந்து கொண்டே அவசரமாக குளித்து புறப்பட்டேன்.  அறையில் உடனிருந்த  கமலகண்ணன், சுசீல், விஜயகுமார் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த வேறு ஒரு குழுவாக நடை சென்றோம். வழியில் ஏற்கனவே நடந்து சென்ற ஜெமோ, கடலூர் சீனு, அரங்கசாமி, விஜயராகவன் அணியுடன் சேர்ந்து கொண்டோம். தேநீர் கடையில் விவாதம் பன்னாட்டு உளவு பற்றி சென்றது. ரஷ்ய உளவுதுறையான KGP ல் ஊடுறுவிய அமெரிக்க உளவாளி பற்றி ஜெமோ பேசினார். அந்த உளவாளி பெட்டி பெட்டியான ஆவணங்களுடன் பிரிட்டன் தூதரகத்தில் சரண்டைய சென்ற நிகழ்வின் சித்திரம் Fall of the Titan என்ற புத்தகத்தில் பதிவாகியிருப்பதையும் பற்றி உரையாடல் நிகழ்நத்து.

IMG_8399

காலை உணவு பரிமாற உதவியபின் அவசரமாக உண்டு முடித்து,  ஏற்கனவே தொடங்கிய இரண்டாம் நாள் நிகழ்வு நடந்த அரங்கத்திற்கு சென்றோம். முதல் அமர்வில் எழுத்தாளர் சு.வேணுகோபால் கலந்துரையாடலை நடத்தினார். எழுத்தாளன் வாழ்வனுபவத்தையும் அவனது படைப்பின் பரப்பில் அந்த அனுபவத்தின் பங்கினை பற்றியும் விவாதம் நிகழ்ந்தது. இவையிரண்டிற்கும் நேரடியாக உள்ள தொடர்பை அருதியிட்டு சொல்ல முடியாது. உதாரணமாக நிலப்பிரபுவான டால்ஸ்டாய் வாழ்வில் அடைந்த அனுபவத்தினை விட அவரின் பெரும்படைப்புகளின் பரப்பு மிக மிக அதிகம் என விவாதிக்கப்பட்டது. கு.அழகிரிசாமியின் ‘’சந்திப்பு’ என்ற கதையை சொன்னார் வேணுகோபால், பருத்தி காட்டில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெரியம்மாவை,  சந்திக்க செல்கிறார் கதை சொல்லி, அவரின் சேலையில் இருந்த முடிச்சை பார்த்து கண்டுகொள்ளும் அவர் தன்னை பற்றி நான்தான் உங்கள் மகன் என கூறி  மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்திய போது கூட, பல நீண்ட கால விவசாய உழைப்பால் நினைவு மங்கிப்போய், நைந்து போன உடலுடன்  பெரியம்மா ‘ம்’ என ஒரே சொல்லை சொல்லி கடந்து போகிறார். விவாதம் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் ஆளுமை, எழுத்தின் பக்கம் சென்றது. ஜெமோ, இந்தியாவில் கடந்த 50 வருடங்களில், உருவாகிய 10 மாபெரும் எழுத்தாளர்களில் பஷீர் கண்டிப்பாக ஒருவர் என்றார். இந்தியாவிலிருந்து மொழியாக்கம் மூலம் மேற்கில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஆளுமை பஷீர் என்றார். அரங்கசாமி ஓங்கி மனதினை குத்தும் நிகழ்வுகள் அவரின் படைப்பில் இல்லையென்றாலும் நிஜமான பிரியம் இருக்கும் என்றார். ஜெமோ 1969 முதல் 1972 வரை தடை வரும் முன் பெரிய விஷயங்களை தீவிரமாக எழுதினார் பஷீர். 1972ல் சுபி த்ததுவத்தில் நம்பிக்கை கொள்ளும் வரை, முதலில் தத்துவத்திலும், பண்பாட்டிலும் ஆழ்ந்த அவநம்பிக்கையுடனிருந்தார்,  அதன் பின் பல எளிய கதைகளை எழுதினார் என்றும்.

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து 12 வருடங்களுக்கு பின் வீடு திரும்பிய மகனுக்காக, ஒவ்வொரு நாளும் சமைத்து வைத்து காத்திருக்கும் அன்னையின் பேரன்பின் சித்திரம் அவரின் ஒரு கதையில் வருகிறது. ஒரு நண்டின் படத்தை , தர்பாரில் வரைந்து மாட்ட ஒரு அரசனுக்கு தோன்றுகிறது ,  அதற்காக சீனாவிலிருந்து ஓவியரை அழைத்து வரும் மன்னன் அவனுக்கு  பொன்னையும், அரண்மனையையும் 2 வருட நேரமும் கொடுத்து காத்திருக்கிறார். கடைசி நாள் வரை காத்திருந்து, ஓவியம் வரைந்து கிடைக்கப்பெறாமல் பொறுமையிழந்து, இன்றிரவு 12 மணிக்குள் அவன் வரையவில்லையெனில் அவன் தலையை கொய்துவிடு என காவலாளிகளுக்கு கட்டளையிடுகிறான். கடைசி நிமிடத்தில் அவன் தீட்டிய வெறும் கோடு போன்ற ஓவியம், மன்னனின் மகனால் மட்டும் அந்த ஓவியம் நண்டு சென்ற இடத்தின் தடம் என அறிந்து, மற்றவருக்கு அவன் உணர்த்துவதாக கதை முடிகிறது.  மாபெரும் திறப்பு, தத்துவ விசாரணை அவரது கதையில் பெற முடியாது, ஆனால் சின்ன சின்ன விஷயங்களில் கனிவும், கருணையும் கொட்டி கிடக்கும் என்கிறார். தமிழில் அவரது கதைகளின் மொழியாக்கம் ‘பாத்தும்மாவுடைய ஆடு’ கிடைக்கிறது என்றார்.

விவாதம் சு.வேணுகோபால் கதைகள் பக்கம் திரும்பியது. ஆட்டம், நிலவெண்மை கதைகளில் அருமையான பாத்திரம், கதைகளம் இருந்தும் அது முழுவதும் நிகழாமல் முடிந்துவிட்டதாக சுநீல் கருதுவதாக கூறினார்.  ஆசிரியர் அவர் கதைகளில் மனித மனதின் ஊடாட்டத்தை, வாழ்க்கை பற்றிய விசாரணையை பதிவு செய்வதே முதன்மை நோக்கம் என்றார். இந்த கதைகளின் மூலம் தன் பிறந்த இடத்திலிருந்து, வேறு ஒரு நிலத்திற்கு சென்று வாழும் மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை சொல்ல முயன்றிருக்கிறேன் என்றார். அவரின் ஒரு கதையில் நிலம்பெயர்ந்து சென்ற ஒரு கதை சொல்லி, தனது 55வது வயதில் பிறந்த ஊருக்கு திரும்புகிறான். அவன் மீண்டும் அங்கு வந்து காலூன்றுவதில் உள்ள வேதனையையும் தத்தளிப்பையும் விவரித்திருக்கின்றேன் என்றார். இந்த எழுத்து சிக்கல்களை தவிர, எழுத்தை மட்டும் நம்பி வாழ இயலாத தமிழ் சூழலில், வெளியில் இருந்து எழுத்தாளன் எதிர்கொள்ளும் லௌகீக அழுத்தமும் காரணமாக இருக்கலாம் என்றார். இந்த கதைகள் இன்னும் எழுதப்படாத அவரின் நாவலின், எழுதப்பட்ட பகுதிகள் என்றார். ராஜகோபாலன் அவர் கதைகளில்  திருநங்கைகள், குழந்தை பெற முடியாத ஆண் போன்ற குறைபாடுள்ள மனிதர்கள் வீழ்ச்சியடைந்து பின்பு மீளும் சித்திரம் மீண்டும் மீண்டும் வரும் காரணம் என்ன? என் வினவினார். தனது ‘பால்கனிகள்’ மற்றும் பிற கதைகளில் ஆதரவை தேடும் ஏற்றதாழ்வு மிக்க மனிதர்கள், வாழ்வதற்கான நம்பிக்கையை துருத்தலில்லாமல் சொல்ல முயன்றிருப்பதாக ஆசிரியர் பதிலளித்தார்

IMG_8393

தொடர்ந்த உரையாடலில், எழுத்தாளர், தனது வாழ்வனுவங்களை பற்றி விவரித்தார். இளம் ஆடு ஒரு சிறிய ஓடையை அல்லது நிலபிளவை  ஒரே நேரத்தில் நான்கு கால்களினாலும் தாவுவது ‘மளிச்சு’ என்ற சொல் மூலம் தேனி வட்டாரத்தில் வழங்கப்படுகிறது என்றார்.  மாடு நடப்பது ‘தரக் தரக்’ எனவும் அங்கு சொல்லப்படுகிறது என்றும், நாய் ஓடுவது தொத்தலாட்டம் எனவும் சுவாரஸ்யமாக விவரித்தார்.   கி.ரா. எழுத்தில் இதுவே லொங்கோட்டம் எனப்படுகிறது என்றார். அதே போல கிராமத்தில் மாடு வாங்கும்போது மொத்தமாக புல் அள்ளி அதன் முன்னால் போட்டுவிட்டு, எந்த மாடு அதை கொத்தாக சாப்பிடுகிறதோ, அதுவே ஆரோக்கியமான மாடு எனவும். ஒவ்வொரு புல்லாக வாயால் எடுத்து மெதுவாக சாப்பிடும் மாடு உழவுக்கு உதவாது எனவும் கூறினார். அவரின் வீட்டிற்கு பின்னால் இருக்கும் 80 அடி ஆழ கிணற்றில், வீட்டில் வளர்க்கும் நாயை கைகளில் பிடித்துக்கொண்டே உள்ளே தாவி, அந்த நாயின் துள்ளலினை குதூகலமாக அனுபவித்ததை விவரித்தார். அதே கிணறும் , அதற்கு தண்ணீர் அளிக்கும் குளமும் பத்து வருடங்களாக வற்றி வருகிறது என்றார்.

இந்த தலைமுறை வரை விவசாயத்தை நம்பி வாழும் அவரது குடும்பத்தின் வாழ்வு சூழலலை அவர் விவரித்தது வியப்பினையும், நெகிழ்ச்சியையும், வருத்தத்தினையும் ஒருசேர தந்தது.  கடுமையான உழைப்பாளிகளான அவரது தாய் மற்றும் தந்தை. சிறுக சிறுக சேமித்து வாங்கிய 30 ஏக்கர் நிலத்தில், 10 ஆண்டுகளாக விடாமல் விவசாயம் செய்து, ஒவ்வொரு வெள்ளாமையிலும் தோற்பதாகவும்,  7 இலட்சம் வரை கடனாளியானதாகவும் கூறினார். தன்னைவிட 10 வயது பெரியவரான, அவரை தம்பி என கருதாமல் மகன் போல வளர்த்தவர் அவர் அண்ணன். இருவருக்கும்  சொந்தமான நிலத்தில், மொத்தமாக பருத்தி, தட்டாம்பயிறு என விவசாயம் செய்து பராமரிப்பதுதான் அவரது அண்ணன் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம். 20 வருடமாக அந்த 10 ஏக்கர் நிலத்தின் விளைச்சலில் ஆசிரியரின் பங்கினை அவர் என்றுமே கேட்டு பெற்று கொண்டதில்லை எனவும், அண்ணனாக பார்த்து தருவதுதான் கூறினார். காங்கேயம் காளையை வளர்பபதற்கு ஒரு நாளில் 300 வரை செலவு பிடிக்கும், மெல்லிய சாக்கினை மடித்து வைத்து அந்த காளையின் முதுகினை தடவி கொடுத்து பாசமாக வளர்த்தார் என்றார். அதற்கு மாற்றாக டிராக்டரை பயன்படுத்தலாம் என்ற யோசனைக்கு பதிலாக, கட்டுதரையில் காளையில்லையென்றால் அண்ணன் இறந்து விடுவேன் எனறார் அவர் அண்ணன். தன் மகனின் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்த அண்ணன் தன் உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல், மருத்துவத்திற்கு வைத்திருந்த 6ஆயிரம் ரூபாய், கடனுக்கு வட்டி கட்ட உதவும் என, உடல் நோயை தாங்கியிருக்கிறார். தீயூழாக, குளத்திலும் தண்ணீரில்லை, மழையும் பெய்யவில்லை.  எவரிடமும் இதனை பகிராமல், மன அழுத்ததில் இருந்த அவரது அண்ணன், அவரது நிலத்தில் , வளரந்து கருகும் பயிரின் நடுவேயே உட்கார்ந்து அமர்ந்து மரணித்திருந்த இருந்த காட்சியை ஆசிரியர் விவரித்தது மனதை வருத்துவதாக இருந்தது. இந்த சரிவு ஒவ்வொரு விவசாயியின் சரிவு,  ஒவ்வொரு முறையும் அவரை சந்தித்து பின் விடைபெறும் போது,  பேருந்தில் படியில் ஏறப்போகும் முன்வரை, கொடுக்கவா வேண்டாமா என தயங்கி பின், மனம் பொறுக்காமல் அவர் கொடுக்கும் 600 ரூபாயை எண்ணி, அந்த தயக்கத்தினை எண்ணி வருந்துவதாக ஆசிரியர் கூறினார். எதிர்காலத்தில் தான் எழுதப்போகும் மாபெரும் படைப்பிற்காக இந்த  அனுபவங்களை சேமித்து வைத்திருப்பதாக சொல்லி, தன் உளம் திறந்த நேர்மையான, வலிமிகுந்த பேச்சினை நிறைவு செய்தார் ஆசிரியர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்