ம நவீனின் - பேச்சி - வாசிப்பனுபவம்

ம நவீனின்  - பேச்சி

பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்ட தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல இருந்தது.

கணிணியில் தமிழ் எழுத்துருக்களை, டைப் பதிக்கும் இந்த தலைமுறை  இளைஞனுக்கு, தன் இறப்பின் விளிம்பில் இருக்கும் சென்ற தலைமுறை அப்பா, முன்பொரு முறை நிகழ்ந்த தன் வாழ்வின் உச்சநுனித் தருணத்தைப் பகிர்கிறார். இவர்கள் உரையாடல் வழியாக கதை விரிகிறது.   வெள்ளைக்கார துரையிடம் வேலையாளாக இருந்த தன் தாத்தா, அவரளித்த துப்பாக்கியை சிரத்தையுடன் பேணியவர். வேட்டை நாய்களின் துணை கொண்டு காட்டுப்பன்றிகளை வேட்டையாடி அதன் தலைகளை மண்ணில் புதைத்து பற்களை சேகரித்தவர். இறந்த வேட்டைநாயின், ‘ரத்த சதையின் மீது கறுப்பு கம்பளி போர்த்தியது போல இருந்தது’ ‘ஒரு தேர்ந்த வீரனின் வாளைப்போல இடவலமாக சுழன்ற வாள்’, என சில நொடிக்குமுன் விபத்தில் இறந்த விலங்கின் உடலின் சதையைத் தொட்டு வெதுவதுப்பை விரல் நுனியில் உணர வைத்த அனுபவத்தைத் தந்தது.  தாத்தாவிற்கு பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தபின் ஒன்பதாவதாக பிறந்த பெண்ணும், கதைகூறியின் அன்னையான பேச்சிக்கும் அவருக்கும் இடையேயான தூற்றப்பட்ட உறவு, அவரின் பேரனான கதைகூறியின் மீதான அன்பில் எதிர்மறைத் தாக்கம் செலுத்தவில்லை. ஆனால் அந்த வினை கதைசொல்லிக்கும் அவன் மனைவி பொன்னிக்குமிடையேயான சிக்கலான உறவானதை எண்ணி உளன்று தாத்தா இறக்கிறார்.

மேற்கு மலேசியா காட்டின் மஞ்சளும் செம்மையும், மகரந்தமு்ம்  நிரம்பிய சூழலின் இலையிலையான வர்ணனை, பலகைத்தரை வீடு கொண்ட கம்பம், தாய்லாந்துகாரர்களிடம் பெறப்பட்ட ரவை,  காற்றில் பறந்து வந்த வினோத இலைகள் பறவைகள் போலிருந்தன், மகரந்தம் சூழில் சேரந்து Navin

எண்ணை ஊறும் செம்பனை ஆண்மரம், என நுண்தகவல்கள் விவரிப்புகள், வாசிப்பை ஆழமாக்கின. கதையின் உச்சத்தில்  தாத்தா புதைத்த பன்றிகளின் வழித்தோன்றலாக வாய்ப்பிருக்கும் ஒரு முனிப்பன்றி, பலிக்கோழியை பேச்சிக்காக கொண்டு செல்லும் கதைகூறியை கொல்ல முழுத் தீவிரத்துடன், விரட்டுகிறது. ஆற்றங்கரை ஆலமரத்தின் கீழ் வீற்றுருக்கும் பச்சிளங்குழந்தைகளை காத்தருளும்,  பேச்சி பொன்னியின் சாயலுடன் எழுந்து முனிப்பன்றியுடன் சமரிட்டு வென்று, அவளின் பிள்ளையான கதைசொல்லியை முலைப்பால் கொடுத்து காக்கிறாள். 


என் ஆதி நினைவு தெரிந்த  முதல் பேச்சியம்மனும், சப்த கன்னியர்கள் கூட சிறுமிகளாக தோன்றுமளவிற்கு,  மஞ்சளும், செம்பொடியும் பிரித்தறிய முடியாதபடி கலந்து படித்துறையில் எழுந்திருக்கிறாள்.  பச்சிளம் பிள்ளையைக் காக்க பேருருவெடுத்து சன்னதமாடி எதிரியைக் கொன்று உப்புக் குருதியை குடித்தபின்னரான பெருந்தாகத்தை அடக்க இவளுக்கு தேங்கிய பச்சைப்பாசிக் குளத்தின் நீர் போதாத வெறும் சொட்டுதான் போலும். கரையைத் தொட்டு  ஓடிய வைகைகூட இப்போது போதாமல் வீற்றிருக்கிறாள்.. பிரபாவலிக்குள் அடக்கப்பட்டு, கருவறையின் குறுவாயில் வழியாக இந்த பேச்சியின் ஆகிருதியை முழுமையாகக் காண முடியாது போலும், வரிப்புலி போன்ற கோரைப்பற்கள் தெரிய செவ்வாய்பிளந்து  தன் உக்கிரத்தை ஒவ்வொரு அங்குலத்திலும் காட்டி வெட்ட வெளியில் நிற்கிறாள். அவளின் தழல்முன் தாழ்ந்து வணங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

பொன்னியை உடலுறவிற்காக பணிய வைக்க பாலியல் சைகைகள்,  தீண்டல் அழுத்தம், சீண்டும் பேச்சு என அடுத்தடுத்து முயலும் கதைகூறியின்  கீழுணர்வின் அப்பட்டமான விவரிப்பு நாளங்களில் வெப்பமேற்படுத்தி துணுக்குற வைத்தது. என் வாசிப்பில் அம்மா,  அப்பாவின் ஆரம்பகால மனம் ஒன்றாத உறவு விடுபட்ட கோட்டுச் சித்திரமாக மகனுக்கு விவரிக்கப்படுகிறது. இந்த விவரிப்பு தீவிரமாக இல்லை என மகனுக்கு தோன்றுகிறது.  இந்த அத்தியாயத்தின் தீவிரத்தை மகன் மேம்படுத்த எத்தனித்து விரிவாக்குகிறானோ எனத் தோன்ற வைக்கிறது. என் நோக்கில், கதையில் இந்த பகுதிமட்டும், இன்றைய தலைமுறையை  முன்னிறுத்தும் மகன், தன் இக்காலப் பார்வையை தாராளமாகப் பயன்படுத்தி, தந்தை கூறிய கதையில் இடைச்செருகலாக நுழைத்திருக்கிறான். கதையில் இந்தப் பகுதி மட்டும், புணர்மம் மற்றும் இன்னபிற காட்சி ஊடகங்களின் 24 மணிநேர ஆக்கிரமிப்பின் பிடியில்,  ஆண் பெண் உறவின் இயல்பான உடல் மனக் கிளர்ச்சியினை இழந்து கொண்டு தனித்தீவுகளாகிக் கொண்டிருக்கும் இன்றையை தலைமுறையின் மீது நவீனின் விமர்சனமாகவும் தோன்றியது. ஆனால் அதற்கு மேலான உண்மையில், பொன்னி தன்மீது அறமற்ற சீண்டல் கொடு்க்கும் கணவனையே முழு முற்றாக சார்ந்து வாழ்கிறாள். உறவினை இழக்காமல் தன்னை காத்துக் கொள்ள,  சன்னதம் கொண்டு, பயமுறுத்துவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. தன்னிச்சையுடன் விழிப்புமனதால் நிகழ்ந்திருந்தாலும், அனிச்சையாக ஆழ்மனத் தூண்டலால் நிகழ்ந்திருந்தாலும், அது பொருத்தமான எதிர்வினைதான் எனத் தோன்றியது.

சிக்கலான பண்பாடு , காலநிலை, மொழிகள் கொண்ட தெற்காசியா பெருநிலத்தை பிரிட்டானிய பேரரசு மெல்ல மெல்ல எப்படி  ஆக்கிரமித்தது என்பதும், எப்படி நூறாண்டுகளாக சுரண்டி ஆண்டார்கள் என்பதும் என்றுமே என்னை வியப்பில் ஆழ்த்தி சிந்திக்கத் தூண்டும் கேள்வி.  இதற்கான விடைகளை என் கற்பனையை விரிக்கும் பாத்திரங்களும் சூழல்களும், மோதல்களும் நிரம்பிய புனைக்கதைகளுக்குள் தேடுகிறேன். கதைசொல்லியின் தாத்தாவை பிரிட்டானிய பேரரசாகவும், கதைசொல்லியை பிரிட்டனில்  பிறந்து இந்திய பிரிட்டானிய இராணுவத்தில் உயர்பதவியிலிருந்த ஒரு தலைமை வீரனாகவும், பொருத்திப் பார்க்கிறேன். செம்பனைக் காட்டினை இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த போர்ச்சூழலாவும், முனியேறிய பன்றியை ஜெர்மானிய ராணுவம் அல்லது ஜப்பானிய ராணுவம் என்றால். தன்னை சுரண்டும் பேரரசிற்காக, செருக்களத்தில் சன்னதம் கொண்டு நின்று,  முனைமுகத்தில் முனியேறிய பன்றியை தடுத்து நிறுத்தி போரிட்ட, இந்த நிலத்தில் பிறந்த ஒரு சிப்பாயின் கடுஞ்சினத்தில், பொன்னி உருவில் வந்த பேச்சியை  மனம் பொங்க காண்கிறேன்.


<நிறைவு>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்